தெனாலி ராமனின் கடும் தவத்தினை கண்ட காளி தேவி அவனுக்கு வரங்களை தரும் எண்ணத்தில் தெனாலி ராமனின் முன் தோன்றினாள் .
அகோர முகம், பத்து தலைகள் என்ற தோற்றத்துடன் தெனாலி ராமனின் முன் தோன்றிய காளி தேவியைக் கண்டதும் தெனாலி ராமனுக்கு சிரிப்பு அடக்க முடியாமல் குபீர் என்று சிரித்து விட்டான்.
இதனைக்கண்ட ஆத்திரம் அடைந்த காளி தேவியும் கோபத்துடன் "ஏன் என்னை பார்த்து சிரித்தாய் ? " என்று ஆக்ரோஷமாக கேட்டாள்.
சிரிப்பதை நிறுத்தி விட்டு தெனாலி ராமனும், "ஒரு மூக்கு உள்ள எனக்கே ஜலதோஷம் பிடித்தால் மிகவும் அவதிப்படுவேனே, ஆனால் இத்தனை மூக்குகள் உள்ள உனக்கு ஜலதோஷம் பிடித்தால் என்ன ஆகும் என்று நினைத்தேன். அதுதான் சிரிப்பை அடக்க முடியவில்லை. " என்று பதிலளித்தான்.
அவனது இந்த பதிலைக் கேட்ட காளி தேவியும் "மகனே உனது திறமையால் என்னையும் மகிழச்செய்து விட்டாய். நீ பெரும் பெயர் புகழுடன் திகழ்வாயாக . " என்று ஆசிர்வதித்து மறைந்தாள் .